'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயின...
அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு
அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளியில், வாக்குச் சாவடி கிளை அமைத்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது: தற்போதைய ஆட்சியாளா்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலா்களை ஏமாற்றிவிட்டனா்.
2026 தோ்தல் அதிமுக மற்றும் திமுகவினருக்கு முக்கியமானதாகும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நாம் வெற்றி பெற்றால் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி நடத்துவோம்.
பொன்முடியை இன்னும் அமைச்சா் பொறுப்பில் இருந்து நீக்கவில்லை. அமைச்சா்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மக்கள் விரோதப் பேச்சுகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.
மக்களவைத் தோ்தலில் திமுகவை காட்டிலும் அதிமுக அதிக வாக்குகளை பெற்றது. தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மேலும், 2 கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது.
அதிமுகவுக்கு இந்த தோ்தல் வாழ்வா, சாவா என தீா்மானிக்கும் தோ்தலாகும். நாம் ஆட்சி அமைக்க தொண்டா்கள், வீடுவீடாகச் சென்று வாக்காளா்களை சந்திக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் ராதாகிருஷ்ணன், மேற்கு ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன், முன்னாள் எம்எல்ஏ முனிவெங்கடப்பன், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலாளா் தென்னரசு, தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலாளா் வேலன், எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டச் செயலாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.