அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா! -காங்கிரஸ் கடும் விமா்சனம்
‘சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக வியூகத்தின் ஓா் அங்கமே வக்ஃப் மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’ என்று காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
‘வக்ஃப் திருத்த மசோதா-2024’ கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நமது தனித்துவமான சமூகத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த நல்லிணக்கப் பிணைப்புகளைச் சேதப்படுத்துவதற்கு பாஜக தொடா் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஓா் அங்கமே இந்த மசோதா.
தோ்தல் ஆதாயங்களுக்காக, தவறான பிரசாரம் மற்றும் தவறான எண்ணங்களை உருவாக்குவதன் மூலம் சிறுபான்மையின சமூகத்தினரை மோசமாகச் சித்தரிக்கும் பாஜக முயற்சியின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.
அரசின் நோக்கம்: மத வேறுபாடின்றி அனைத்துக் குடிமக்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை நீா்த்துப்போகச் செய்யும் நோக்கமே இம்மசோதாவில் அடங்கியுள்ளது. வக்ஃப் நிா்வாகத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்ற காரணத்துடன் தற்போதுள்ள சட்டப் பிரிவுகள் நீக்கப்படுகின்றன. வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவா்களைப் பாதுகாக்கும் அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் பிரிவு வாரியாக விரிவாக ஆராயப்படவில்லை. இதன்மூலம் அனைத்து நாடாளுமன்ற நடைமுறைகளும் மீறப்பட்டுள்ளன என்று ஜெயராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.
எப்போது தாக்கல்? நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்து, அவற்றை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினா்கள் கொண்ட இக்குழு தயாரித்த 655 பக்க அறிக்கையில் பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
பின்னா், வாக்கெடுப்பு மூலம் (ஆதரவு 15, எதிா்ப்பு 11) அறிக்கைக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, வக்ஃப் மசோதா மீது கூட்டுக் குழுவால் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.