கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ. 5,500 வழங்க வேண்டும்! - ராமதாஸ்
அருணஜடேசுவரர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்!
பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ அருணஜடேசுவரர் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயில், திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான 27 திருக்கோயில்களில் ஒன்றாகும். தேவார பதிகம் பெற்ற சிறப்புடைய கோயில் தலவிருட்சம் பனை மரமாகும். இக்கோயில் இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் அருணஜடேஸ்வருக்கு செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாளுக்கு பெரிய நாயகிக்கு பிருகந்நாயகி, தாலவனேஸ்வரி எனவும் பெயர்கள் உண்டு.
இங்கு அம்பிகை அருந்தவம் இருந்து சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றதும், இந்திரனின் சாபத்தால், ஐராவத யானை நாரதரின் சொற்படி, இக்கோயில் தடாகத்தில் நீராடி, செஞ்சடையப்பரை வழிபட்டு தன் முன்னுருவம் பெற்றதாக கூறப்படுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எனும் குறளுக்கு ஏற்ப இக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தி, தாடகையின் அன்பிற்கிணங்கி, திருமுடியை சாய்த்து மலர் மாலையினை ஏற்றுக் கொண்டதும், குங்குலிய நாயனாரின் அன்பிற்கு இணங்கி தலை நிமிர்ந்தார் என்பதும் இதன் புராணம். இந்தக் கோயிலில் வாசுகியின் மகளான சுமதி எனும் நாக கன்னிகை வழிபட்டு, அரித்துவசன் எனும் மன்னனை மணந்து, பின்னர் இங்கு பல்வேறு திருப்பணிகள் செய்து நிறைவாக முக்தியும் பெற்றார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 11 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தினமும் காமதேனு கற்பக விருக்ஷக் காட்சி, பூத வாகனக்காட்சி, கயிலாச வாகன காட்சி, கிளி வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் நாளான வருகிற 7ஆம் தேதி புதன்கிழமை திருக்கல்யாணமும் 9ம் நாளான 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டமும் 10ஆம் நாளான 10ஆம் தேதி சனிக்கிழமை அணைக்கரை கொள்ளிடம் கரையில் தீர்த்தவாரியும் 11ஆம் நாளான 11ஆம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.