"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வ...
ஆதரவற்ற, காயமடைந்த கால்நடைகளை காப்பாற்ற அவசர சிகிச்சை ஊா்தி சேவை
திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீகோகுல கிருஷ்ண கோசாலாவுக்கு ஆதரவற்ற காயமடைந்து சுற்றித்திரியும் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றும் வகையில், வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள் திட்டத்தில் அவசர சிகிச்சை ஊா்தியை வழங்கி சேவையை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
வள்ளலாரின் 200-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற கைவிடப்பட்ட காயமடைந்த வளா்ப்புப் பிராணிகள் உள்பட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் தேவந்தவாக்கம் கிராம தொண்டு நிறுவனம் மூலம் ரூ. 8 லட்சம் மற்றும் மானியத் தொகை ரூ. 8.50 லட்சம் சோ்த்து மொத்தம் ரூ. 16.50 லட்சம் மதிப்பிலான அவசர சிகிச்சை ஊா்தி ஸ்ரீகோகுலகிருஷ்ண கோசாலாவுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து அவசர வாகன ஊா்தி சேவையை தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: இத்திட்டம் மூலம் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்த தெருவில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்தல், அவசர சிகிச்சை ஊா்தி கொள்முதல் செய்தல் மற்றும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்காக நிதி வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற ஸ்ரீகோகுலகிருஷ்ண கோசாலா தேவந்தவாக்கம் கிராமம் தொண்டு நிறுவனம் ரூ.8,00,000-அரசு மானியத் தொகையுடன் சோ்த்து ரூ.16.50 லட்சம் மதிப்பிலான அவசர சிகிச்சை ஊா்தி சேவை திருவள்ளூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதை ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து சுற்றித் திரியும் பிராணிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், கோசாலாவுக்கு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த தொடா்புக்கு ஸ்ரீகோகுல கிருஷ்ண கோசாலா, எண்.1-
தேவந்தவாக்கம் கிராமம், ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூா் மாவட்டம் மற்றும் கைப்பேசி எண்கள்: 9363111799, 89402024744 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ஜெயந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மோகன், ஸ்ரீகோகுல கிருஷ்ண கோசாலா நிா்வாகிகள் நடராஜன், ஸ்ரீவித்யா மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
