ஓராண்டில் 3 கோப்பைகள்: ஊர்வலம் சென்ற பார்சிலோனா, 6 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பு!
ஆபரேஷன் சிந்தூர்! கனிமொழி எம்.பி. உள்பட 40 பேர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 ஆம் தேதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதியில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தாக்குதலை இந்திய ராணுவம் முன்னெடுத்தது.
இந்த நடவடிக்கை தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதுடன், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதே, அதுகுறித்து உலகின் முக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து முக்கிய நாடுகளுக்கு விளக்கமளிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களை மத்திய அரசு நியமித்துள்ளதாகத் தெரிகிறது. காஷ்மீர் மற்றும் எல்லைதாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைக்க, பல்வேறு நாடுகளுக்கு எம்.பி. குழுக்களை அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பாஜக எம்.பி.க்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் பைஜயந்த் பாண்டா, திமுக எம்.பி. கனிமொழி, ஒருங்கிணைந்த ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமார் ஜா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தனித்தனியாக குழுக்களை தலைமை வகிப்பதுடன், ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறான கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 5 முதல் 8 பேர் இருப்பர்.
சுமார் 40 எம்.பி.க்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தக் குழுக்கள் அடுத்த வாரம் புறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.