ஆப்கன் மக்களுக்கு 4.8 டன் தடுப்பூசிகளை அனுப்பிய இந்தியா!
ஆப்கானிஸ்தான் மக்களுக்காக சுமார் 4.8 டன் அளவிலான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்திய அரசின் சார்பில் 4.8 டன் அளவிலான தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேபிஸ், டெட்டனஸ், ஹெபாடிட்டிஸ் பி மற்றும் இன்புளூயன்சா உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த உதவிக்காக ஆப்கானின் பொது சுகாதாரத் துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
ஆப்கானின் சுகாதாரத் துறை இந்தியா அனுப்பிய தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதாகவும், இந்த உதவியானது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த உதவியின் மூலம் கடுமையான தாக்குதல்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் அத்தியாவசிய மருத்துவத் தேவைகள் நிறைவேற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் துபையில் ஆப்கானிஸ்தானின் இடைக்கால வெளியுறவுத் துறை அமைச்சரான மவ்லாவி அமீர் கான் முத்தாகியுடன் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் ஆப்கனுக்குத் தேவையான மருத்துவப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்தியா மேற்கொள்ளும் என உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:போப் பிரான்சிஸ் மரணம்: இரங்கல் பதிவை நீக்கிய இஸ்ரேல் வெளியுறவுத் துறை!