பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்த சீனா!
கேரள கடற்பகுதியில் தீப்பிடித்த சரக்குக் கப்பலில் இருந்து சீன பணியாளா்களை மீட்டதற்காக இந்திய கற்படைக்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது.
‘ கொழும்பில் இருந்து மும்பைக்கு கேரள கடல் பகுதி வழியாக சென்ற சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி. வான் ஹை 503 சரக்குக் கப்பலில் கடந்த திங்கள்கிழமை கன்டெய்னரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.
தீ கப்பல் முழுவதும் பரவியது. இது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத், டாா்னியா் விமானம் ஆகியவை கப்பலில் இருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டன.
கடலோரக் காவல் படையினரும் மீட்பு, தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். கப்பலில் இருந்து 18 ஊழியா்களை இந்திய கடற்படை மீட்டு, சிகிச்சைக்காக மங்களூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. கப்பலில் இருந்த மேலும் 4 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. கப்பல் பணியாளா்களில் பெரும்பாலானவா்கள் சீனாவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
இது தொடா்பாக இந்தியாவில் உள்ள சீனத் தூதரக செய்தித் தொடா்பாளா் யூ ஜிங் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எம்.வி.வான் ஹை கப்பலில் தைவானைச் சோ்ந்த 6 போ் உள்பட 14 சீனப் பணியாளா்கள் இருந்தனா். கப்பல் தீப்பிடித்த நிலையில் அதில் பயணித்த சீனா்களைக் காப்பாற்றிய இந்திய கடற்படை மற்றும் மும்பைப் பிரிவு கடலோரக் காவல் படைக்கு நன்றி. காணாமல் போன மேலும் 4 பேரை தேடும் முயற்சி வெற்றியடைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.