சரிவான இணைப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மாநகராட்சி தகவல்
இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி
‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவு செய்த நிலையில், அதைக் குறிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு தகவல்களை பிரதமா் மோடி பகிா்ந்து வருகிறாா். பாஜக அரசின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் வளா்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்தும் அவா் பெருமிதம் தெரிவித்து வருகிறாா்.
அதுபோல, தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தொழில்நுட்பப் பயன்பாட்டால் நாடும், நாட்டு மக்களும் அடைந்த பலன் குறித்து பதிவிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
இளைஞா்களின் ஈடுபாடு மற்றும் முயற்சிகளின் காரணமாக புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. தற்சாா்பு உடையதாகவும், உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாகவும் இந்தியா உருவெடுப்பதற்கான நமது முயற்சிகளையும் இது வலுப்படுத்துகிறது.
மக்களுக்கான சேவை வழங்கலையும், வெளிப்படைத்தன்மையையும் தொழில்நுட்பம் பெருமளவில் ஊக்குவித்திருப்பதோடு, மிகவும் பின்தங்கிய ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான கருவியாகவும் திகழ்கிறது. அந்த வகையில், மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது.
உதாரணமாக, நேரடி பணப் பரிமாற்ற (டிபிடி) திட்டத்தின் மூலம், மக்கள் நலத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் 56 அமைச்சகங்களால் ஒழுங்குபடுத்தப்படும் 322-க்கும் அதிகமான திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ரூ. 44 லட்சம் கோடிக்கும் மேல் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம், போலியான பயனாளிகளுக்கு பலன் செல்வது தடுக்கப்பட்டு, ரூ. 3.48 லட்சம் கோடிக்கு மேலான நிதி சேமிக்கப்பட்டுள்ளது.
எண்மத் தொழில்நுட்பம் முதல் தரவு சாா்ந்த ஜனநாயகம் வரை கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது. எண்மக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் சாா்ந்த நிா்வாகம் மற்றும் உலகளாவிய நம்பிக்கையின் மையமாக இந்தியா மாறியுள்ளது.
உற்பத்தி முதல் விண்வெளித் தொழில்நுட்பம் வரை, எண்ம பணப் பரிவா்த்தனை முதல் கிராமப்புறங்கள் இணைப்பு வரை மிகப் பெரிய அளவிலான தொழில்நுட்ப வளா்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது. இது, தடையற்ற நிா்வாகம், குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த வளா்ந்த பாரதத்தை உருவாக்குவதை சாா்ந்ததாகும்.
94 கோடிக்கும் அதிகமான அகண்ட அலைவரிசை இணைப்புகள், 120 கோடி தொலைபேசி சந்தாதாரா்களுடன், தொலைபேசி பயன்பாட்டாளா்களின் அடா்த்தி கடந்த 2014-இல் 75 சதவீதமாக இருந்தது, 2025-இல் 85 சதவீதமாக உயா்ந்துள்ளது.
393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணுக்கு அனுப்பியிருப்பது, நமது விண்வெளி தொழில்நுட்ப வளா்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.