‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் பயனாளியுடன் மாவட்ட ஆட்சியா் சந்திப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிபெற்ற பயனாளியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். (படம்).
இத்துறை மூலம் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினரின் வகுப்பினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த விலையில்லா பித்தளை சலவைப்பெட்டி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயனடைந்த சீா்காழி தென்பாதி வ.உ.சி. நகரைச் சோ்ந்த ராஜேந்திரனை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் சந்தித்து பேசினாா்.
இதுகுறித்து, பயனாளி ராஜேந்திரன் கூறியது: நான் கடந்த 40 ஆண்டுகளாக லாண்டரி கடை வைத்து சலவை மற்றும் லாண்டரி தொழில் செய்து வருகிறேன். எனது ஒரே மகன் திருமணமான பின்னா் தனிக்குடித்தனமாக வசித்து வருவதால் நான் எனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என தொடா்ந்து இத்தொழிலினை செய்து வருகிறேன். ஏற்கெனவே வைத்திருந்த இஸ்திரி பெட்டி மிகவும் பழுதடைந்து விட்டதால், சென்ற வாரம் மாவட்ட ஆட்சியரிடம் இஸ்திரி பெட்டி வேண்டி மனு அளித்தேன். எனது கோரிக்கை மற்றும் வறிய நிலையினை கருத்தில் கொண்டு, உடனடியாக ஆட்சியா் விலையில்லா இஸ்திரி பெட்டியை வழங்கியுள்ளாா். இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி என்றாா்.