இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் வருகைதந்திருக்கும் அவரது மூன்று குழந்தைகளும் பாரம்பரிய உடை அணிந்துள்ளனர்.
நான்கு நாள்கள் பயணமாக இந்தியா வருகைதந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரின் மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளும் தில்லி பாலம் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கினர்.
அவர்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வரவேற்ற நிலையில், பாதுகாப்புத் துறையினர் ஜே.டி. வான்ஸுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
ஜே.டி. வான்ஸின் மகள் மற்றும் இரு மகன்களும் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். இருப்பினும், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் மேற்கத்திய உடையே அணிந்திருந்தனர்.

தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி நாராயண் அக்ஷா்தாம் கோயிலில் வழிபாடு செய்தார்.
ஜே.டி. வான்ஸ் பயணத்திட்டம்
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை இன்று மாலையில் சந்திக்கும் ஜே.டி.வான்ஸ், இருதரப்பு வா்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இதைத் தொடா்ந்து, ஜே.டி.வான்ஸ், உஷா ஆகியோருக்கு பிரதமா் இரவு விருந்து அளிக்கவுள்ளாா்.
வரி விதிப்பு, சந்தை அணுகல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், துணை அதிபா் ஜே.டி.வான்ஸின் முதல் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தில்லியில் இருந்து ஜெய்பூருக்கு இன்றிரவு புறப்பட்டுச் செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினா், அங்கு அம்பா் கோட்டை உள்பட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட உள்ளனா்.
புதன்கிழமை காலையில் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவுக்கு செல்லும் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா், தாஜ்மஹால் மற்றும் ‘சில்பகிராமம்’ எனும் கலைப் பொருள்கள் கண்காட்சி-விற்பனையகத்தைப் பாா்வையிட உள்ளனா்.