`இனி யாரும் எதிர்த்து கேட்க கூடாது’ - சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை
மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்(25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். பேச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஹரிசக்தி(20) கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் முட்டம் வடக்குத்தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/qbroehab/70766d55-571d-4e73-ba89-31bb41d0c2c1.jpg)
இது குறித்து அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் சாராய விற்பனை செய்வதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மூன்று பேரிடமும் சாராய விற்பை செய்யாதீர்கள் என்றும் சொல்லியுள்ளனர். சாராய விற்பனைக்கு எதிராக அவ்வப்போது, பேசி தட்டிகேட்பவர்களை ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தாக்கி, `உசுரு உடம்புல இருக்காது’னு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்கள். இவர்களது அட்டகாசம் எல்லை மீறிய நிலையிலும் பெரம்பூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முட்டம் பகுதியில் போலீஸார் ரெய்டு நடத்தினர். இதில் சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்து விட்டார். தொடர்ந்து, மூன்று பேரும் தெருவில் ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது, சிறுவன் ஒருவன், `ஏன் சாராயம் விற்கிறீர்கள், இதனால் பல பேர் சீரழிகிறார்கள்?’ என கூற அவனை தாக்கியுள்ளனர். இதையடுத்து ஹரிஷ், ஹரிசக்தி இருவரும் சிறுவனை அடித்ததையும், சாராய விற்பனை செய்வதையும் எதிர்த்து கேட்டுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08-10/64im0jep/WhatsApp%20Image%202023-09-21%20at%2013.25.19%20(1).jpeg)
`எங்களை எதிர்த்து பேசுகிறீர்களா, உங்களுக்கு நடப்பதை பாத்துட்டு இனி யாரும் சாராயம் விற்பதை பத்தி பேசக் கூடாது, போலீஸுக்கும் போக கூடாது’னு ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் நிலை குலைந்த சரிந்து விழுந்த ஹரிஷ், ஹரிசக்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, பெரம்பூர் போலீஸார் சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும், இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட இருவரது உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs