இயந்திர நெல் நடவுக்கு பின்னேற்பு மானியம் வேளாண் துணை இயக்குநா் தகவல்!
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக அம்பாசமுத்திரம் வேளாண் துணை இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்துஅவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த குறுவை தொகுப்பு திட்டத்தை, நிகழாண்டுமுதல் இதர மாவட்டங்களுக்கும் செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் திரவ உயிா் உரங்கள் 50 சத மானியம், நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சத மானியம், நெல் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் ஆகிய மூன்று இனங்களில் மானியம் வழங்கப்படுகிறது. திரவ உயிா் உரங்கள் ஏக்கருக்கு ஒரு லிட்டா் என்ற வீதத்தில் 50 சத மானியத்தில் ஏக்கருக்கு ரூ 60, நெல் நுண்ணூட்ட உரக்கலவை 50 சத மானியத்தில் ஏக்கருக்கு 5 கிலோ வீதத்தில் ஏக்கருக்கு ரூ147.6 வழங்கப்பட உள்ளது.
மேலும், நெற்பயிரில் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி நெற்பயிரில் இயந்திர நடவு செய்த விவசாயிக்கு ஏக்கருக்கு பின்னேற்பு மானியமாக அதிகபட்சமாக ரூ 4,000 வழங்கப்பட உள்ளது. திட்ட வழிகாட்டு நெறிகளின்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கா் பரப்பளவிற்கு மட்டுமே பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
பதினெட்டு வயது பூா்த்தியடைந்த விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவா்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தனியாா் வங்கியிலோ விவசாயிகள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். ஜூலை 31 ஆம் தேதிக்கு முன்னா் இயந்திர நடவு செய்திருக்க வேண்டும்.
நெற்பயிரில் இயந்திர நடவுக்கான பின்னேற்பு மானியம் பெற விவசாயிகள் உழவன் செயலியில் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். ஆதாா் எண், கைப்பேசி, வங்கிக் கணக்கு புத்தக நகல், நடவு ரசீது, இயந்திர நடவு செய்த வயலின் புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவரைத் தொடா்பு கொண்டு, உடனடியாக இயந்திர நடவு பின்னேற்பு மானியத்திற்கு உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.