செய்திகள் :

இரண்டாவதும் மகளா என்று வருத்தப்பட்டேன், ஆனால் இன்று..! - அப்பாவின் பெருமிதம் #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்பு மகள் பிரியாவுக்கு,

அப்பாவின் அன்பும், வாழ்த்துகளும். சென்னைக்கு வந்தால் நேரிலோ, ஊரில் இருந்தால் புலனத்தின் மூலமோ, நாள்தோறும் உன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் அப்பா, இன்று வரை நேரில் பேசாத, பேச முடியாத சில விசயங்களை இந்த மனம் திறந்த மடல் மூலம் உன்னிடம் பேச விரும்புகிறேன்.

நீ எனக்கு இரண்டாவது பெண்ணாகப் பிறந்தவள். ‘பெண் குழந்தை பிறந்திருக்கிறது’ என்று உன் அம்மம்மா சொன்னபோது, ‘அப்படியா’ என்று ஏமாற்றத்துடன் கூறியவன் நான். அதற்குச் சில காரணங்கள் இருந்தன.

முதலாவது, எனது முதிர்ச்சியற்ற அறிவு; இளம் வயதிலேயே எனக்குத் திருமணம் முடிக்கப் பெற்றோர் விரும்பிய போது, நான் சம்மதம் கூறியதே, ‘விரைவில் மணமுடித்து, பிள்ளை பெற்றால், நமக்கு வயதாகும் போது மகன் வந்து விழுதாகத் தாங்கிப் பிடிப்பான்’ என்ற நம்பிக்கையில்தான்(நான் அப்படித்தான் என் அப்பாவுக்குத் துணையாக நின்றேன்).

ஆனால், முதலில் பிறந்தது உன் அக்கா(பெண் குழந்தை!); அப்போதே மனத்துள் சிறிது ஏமாற்றம்தான். ஆயினும், சரி, ‘அடுத்து மகன் பிறப்பான்’ என்ற அசட்டு நம்பிக்கையில் அதைப் பெரிதுபடுத்தவில்லை. அந்நிலையில் இரண்டாவதும் பெண் குழந்தைதான் என்றவுடன் ஏமாற்றம் பெரிதானது என்னவோ உண்மைதான்.

உறவினர் பலரும் சொன்னார்கள், ‘கவலைப்படாதே, அடுத்து உனக்கு மகன்தான் பிறப்பான்’ என்று. நல்லவேளையாக, எனது அறிவு அப்போது சற்று விழித்துக் கொண்டது. அதனால் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

பின்பு உன்னை வளர்க்கும் போது, உன் அக்காவைப் போல நீ படிப்பில் எப்போதும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டாலும், அதற்காக நான் வருந்தவோ, உங்களுக்கிடையே பாகுபாடு காட்டவோ இல்லை. இருவரையும் இரண்டு கண்களாகவே கருதி வந்தேன்.

ஆனாலும், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த என்னால் உங்களுக்கு முதல் தரமான கல்வியோ, வசதிகளோ செய்து தர முடியவில்லை; இருப்பினும், அன்புக்கும், மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லாமல்தான் உங்களை வளர்த்தேன்.

அந்நிலையில், எனக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சறுக்கலால், அவசரத் தேவைக்கு, உனக்கு நான் ஆசையாகச் செய்து போட்ட ஒரே மெல்லிய சங்கிலியை, நீ ஆறாம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளியில் வந்து, வாங்கிச் சென்றேன். (உன் அக்கா அப்போது பெரியவள் என்பதால் ஏற்கனவே தனது சங்கிலியை, ஒரு அவசர நேரத்தில், அவளாகவே அப்பாவிடம் தந்து விட்டாள்).

ஆனால், நீ சிறுமி என்பதால், உன் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை உணர முடியாத முட்டாளாக அப்போது நான் இருந்ததால், எளிதாக உன்னிடமிருந்து வாங்கிச் சென்று விட்டேன்.

அன்று பள்ளியில், நான் போன பின்பு, தோழிகளிடம் நீ அழுதாய் என்பது வெகுகாலம் எனக்குத் தெரியாமலேயே போய் விட்டது. ஆனால் தெரிந்த அன்று, நான் செய்த செயலின் கொடுமையை உணர்ந்து நான் அழவில்லை என்றாலும், என் இதயம் ரத்தக் கண்ணீர் வடித்ததை எவருமே அறிய மாட்டார்கள்; ஏனெனில், ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சட்டமாகக் கூறும் சமூகத்தில் வளர்ந்தவன் நான்.

சோதனை மேல் சோதனையாக, உங்களை அருகே இருந்து, கருத்தாக வளர்க்க முடியாமல், சில ஆண்டுகள் ஊர் ஊராக அலையும் வேலையிலும், உங்களை முற்றிலும் பிரிந்து மூன்றாண்டுகள் மலேசியாவில் குருவியாகப் போய் வேலை செய்தும், நானும் தனிமையில் உழன்று, உங்களையும் தனிமையில் திண்டாட விட்டேன்.

அங்கிருந்து திரும்பி வந்த பின்னும், வறுமையைச் சமாளிக்க, சீட்டுக் கம்பெனி நடத்தி, இரண்டாம் ஆண்டே எதிர்பாராத நஷ்டம் ஏற்பட, ஒரு நிலையில் வீட்டை விட்டே தலைமறைவாகப் போய்விட்டேன். உங்களை உறவினர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நான் மீண்டும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தேன்.

அப்போது நீ பொறியியல் கல்லூரியில் சேர்ந்த நேரம்; உன் அக்கா சிறந்த மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது உடனிருந்து உதவியது போல, உனக்கு எந்த விதத்திலும் உதவியாக இருக்காமல் போய் விட்டேன்.

நீயாக விழிப்புணர்வு அடைந்து, விருப்பங்களை எல்லாம் துறந்து, கருத்தூன்றிப் படித்து, பட்டம் பெற்றாய்; பட்டம் மட்டுமா பெற்றாய்? நூறு விழுக்காடு வருகைப் பதிவுக்காக ஒன்று, சிறந்த மாணவி என்பதற்காக ஒன்று, பாடத்திற்கு ஒன்று என்று, ஆறு தங்கப் பதக்கங்களும் பெற்றாய்!

வெளியூரில் இருந்த நான் செய்தியறிந்து, ஒருபுறம் மட்டில்லாத மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம், ஒரு தந்தைக்கான கடமைகள் எதையுமே செய்ய இயலாதவனாகி விட்டோமே என்ற குற்ற உணர்வால் அன்று முழுவதும் உண்ணாமல், உறங்காமல் தவித்தேன்.

தொலைபேசியில் உன்னுடன் ஒருநாள் பேசிய போது, “நானும் அக்காவும் கல்லூரி விடுதிகளில், அம்மா அம்மம்மா வீட்டில், நீங்க ஏதோ ஒரு ஊரில்... இப்படி ஆளுக்கொரு மூலையில் இருக்கிறோமே.. நாம முந்தி மாதிரி ஒண்ணா இருக்குற காலம் வருமாப்பா?” என்று நீ அழுது கொண்டே கேட்ட கேள்விக்குப் பதில் கூற முடியாமல், வெடித்து வந்த அழுகையை மறைக்க, இணைப்பைத் துண்டித்து விட்டுத் துடியாகத் துடித்தேன். பின்பு வெகுநேரம் கழித்து, மீண்டும் அழைத்து, ஏதோ கூறிச் சமாளித்தேன்.

பின், ஊரில் இருந்த ஒரே சொந்த வீட்டை விற்று, கடன்களை எல்லாம் அடைத்து, அக்காவின் திருமணத்தை எளிமையாக நடத்தினேன். சிதறிய நம் குடும்பமும் ஒன்று சேர்ந்தது.

பெரிய மென்பொருள் நிறுவனத்தில் நீ பணிபுரிந்து சம்பாதித்த பணத்தை அப்படியே சேமித்து, உனக்கு நகைகள் வாங்கி, உன் திருமணத்தை நன்கு முடித்தாலும், இன்றுவரை, பெற்ற பெண்களுக்கு என் வருமானத்தில் இருந்து ஏதும் செய்ய இயலாதவனாகி விட்டேனே என்ற துயரம் என் நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருக்கிறது.

நீ சின்னஞ் சிறுமியாக இருந்த போது, ஒரு நாள் இரவு, உன் அம்மாவுடன் கோபித்துக் கொண்டு நான் அவள் போட்டு வைத்த சோற்றைச் சாப்பிடாமல் இருக்க, நீ மழலை மாறாத உன் பிஞ்சுக் குரலில், ‘அச்சச்சோ, சாப்பிடாமப் படுத்தாத் தூக்கம் வராதுப்பா; நாந்தான் அம்மாவாம், நீதான் பிள்ளையாம்.. நா ஒனக்கு ஊட்டி விடுறேன்’ என்று சொன்னதோடு நில்லாமல், உன் பிஞ்சுக் கைகளால் அந்தச் சோற்றைக் குழம்புடன் பிசைந்து, ‘மொதல்ல கொஞ்சம் சோறைச் சாப்பிடணும்... ஆ சொல்லு’ என்று என் வாயில் கொஞ்சம் சோறு ஊட்டி விட்டு, ‘அப்புறம் கொஞ்சம் கடிச்சிக்கிட’ என்று கூறி பொறிக்கறி ஊட்டி, அந்தச் சோறு முழுவதையும் அன்று சாப்பிட வைத்து, என் தாயுமாகி நின்றாய்.

இன்று, ‘இனி வேலைக்கெல்லாம் போக வேண்டாம், ஓய்வாக இருங்கள்’ என்று கூறி, மாதாமாதம் ஒரு பெரிய தொகையை எனது செலவுகளுக்கென்று என் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறாய்... இத்தனை அன்புக்கு நான் தகுதியானவன்தானா என்ற எண்ணம் என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

எல்லாம் என் முன்னோர் செய்த புண்ணியம் என்ற எண்ணத்தில்தான் நான் இன்னமும் வாழ்ந்து வருகிறேன். திறனில்லாத என்னையும், தெய்வ மகளாகிய உன்னையும் அறிந்த எவரும்,

மகள் தந்தைக் காற்றும் உதவி இவள்தந்தை

என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்

என்று வியந்து, திருக்குறளிலேயே திருத்தம் செய்வார்கள்!

என் தாயின் வடிவாக என்னைத் தாங்கி வரும் மகளே, ‘தாய்க்குப் பின் தாரம்’ என்பார்கள்; என்னைப் பொறுத்த வரையில், ‘மாதாவுக்குப் பின் மகள்’ என்பதே உண்மை ஆகும்.

இப்படிக்கு,

அன்புள்ள அப்பா

Letter Contest

என் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆட்கொள்ள பிறந்த என் அன்பு மகளுக்கு! - அம்மாவின் மடல் |#உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பல நூறாயிரம் காவுகளை வாங்கியிருக்கும் பயண நோய்! - திக் திக் இமாலயப் பயணம்| திசையெல்லாம் பனி- 5

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நான் கண்ட வலிகளை விட நீ கண்ட சவால்களே மிக அதிகம்! - மகளுக்கு அம்மாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பேரன் பேத்திகள் வளரும் வேகத்தை வீடியோ காலில் பார்க்கிறோம்! - பெற்றோரின் வலி| #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அன்னை என்ற ஆலயத்தில் ஆதிபராசக்தியாய் நீ! - அம்மாவிற்கு கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் கேள்விகளுக்கு பதிலுண்டா மகளே? - அம்மாவின் ஆதங்கம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க