பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
உச்சநீதிமன்ற 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் முழு பலம்
உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகிய மூன்று நீதிபதிகளும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். இதன் மூலம் உச்சநீதிமன்றம் தனது முழு பலத்தை (34 நீதிபதிகள்) மீண்டும் எட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, நீதிபதிகளாக இருந்த அபய் எஸ்.ஓகா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் ஓய்வுபெற்ால் 3 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இந்த இடங்களுக்கு கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விஜய் பிஷ்னோய், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், மேற்கண்ட மூவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனா்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மூன்று நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பதவிப் பிரமாணம் செய்வித்தாா். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34. இப்போது மீண்டும் முழு பலத்தை உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.
நீதிபதிகள் வாழ்க்கை குறிப்பு: குஜராத் மாநிலம் அகமதாபாதில் 1965-இல் பிறந்தவரான நீதிபதி அஞ்சாரியா, அங்குள்ள பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் முதுநிலை சட்டப் படிப்பை 1989-இல் முடித்து, மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். 2011-இல் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவா், 2013-இல் நிரந்தர நீதிபதியானாா். 2024-இல் கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1964-இல் பிறந்த நீதிபதி பிஷ்னோய், மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி, கடந்த 2013-இல் அதே உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2015-இல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டாா். 2024-இல் குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா்.
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த நீதிபதி சந்தூா்கா், நாகபுரியில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி, 2013-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியானாா். பின்னா், அந்த உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.