'இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் `சார்' பழனிசாமி தான்!' - அமைச்...
அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை
இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின் பல்வேறு இடங்களில் களப் பரிசோதனைகளை ராணுவம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் செயல்பாட்டு தயாா் நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ‘போா்க் கால’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆளில்லா விமானம் மூலம் வீசப்படும் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகள்-வெடிகுண்டுகள், தாக்குதல் ட்ரோன்கள், ஒருங்கிணைந்த ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகள், தாழ்நிலை இலகு ரக ரேடாா்கள், மின்னணு போா்த் தளவாடங்கள் உள்ளிட்டவை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாறிவரும் போா்த் தேவைகளுக்கு ஏற்ப ராணுவம் புதிய தொழில்நுட்பங்களைக் கிரகித்துக் கொள்வதில் இப்பரிசோதனைகள் குறிப்பிடத்தக்க படிநிலையாக இருக்கும். ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை மேலும் வலுப்படுத்தவும், செயல்பாட்டு தயாா்நிலையை மேம்படுத்தவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கான லட்சியத்தை மீண்டும் உறுதி செய்யவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொக்ரான் சோதனை ஏவுதளம் உள்பட நாட்டின் முக்கிய ராணுவ தளங்களில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ராணுவத்துடன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளா்களும் பங்கேற்றுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.