RCB: உணர்ச்சி வெள்ளம்; கண்ணீர் கொண்டாட்டம் - சாம்பியன்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
"ராகி களி, கீரை தவறாமல் தட்டில் இருக்கும்" - சாய் பல்லவியின் 94 வயது பாட்டி சொல்லும் சீக்ரெட்!
முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர்.
திரைத்துறையில் உச்சத்திலிருந்தாலும் சொந்த கிராமத்தில் நடைபெறும் சுக, துக்க நிகழ்வுகளில் மக்களோடு மக்களாக இணைந்து பங்கேற்று வருகிறார்.
பாரம்பர்ய வெள்ளை நிற உடையிலும் வெள்ளி ஆபரணங்களை அணிந்தும் கோயில் விழாக்களில் சாய் பல்லவி பங்கேற்று வருகிறார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களுடன் நேரத்தைச் செலவிடுவதை அதிக விருப்பம் காட்டி வருகிறார். அதிலும் 94 வயதான பாட்டி தேவியம்மாள் மீது அதீத விருப்பமாம்.
94 வயதிலும் வீட்டுத்தோட்டம் அமைத்து இயற்கை முறையில் கீரை, காய்கறிகளை விளைவித்து வருகிறார். தனக்கு மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களுக்கு உணவுகளைச் சமைத்துப் பரிமாறி வருகிறார்.
தாய் தேவியம்மாள் குறித்து நம்மிடம் பேசிய சாய் பல்லவியின் தந்தை செந்தாமரைக்கண்ணன், "அம்மாவுக்கு 7 பிள்ளைகள். அம்மா கடுமையான உழைப்பாளி.
எப்போதும் ஏதாவதொரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார். காலையில் தினசரி ராகி களியும் கீரையும் தவறாமல் தட்டில் இருக்கும். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவரேதான் உணவு சமைத்துக் கொடுப்பார்.

அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார். ஓய்வெடுக்கச் சொல்லி எவ்வளவு வற்புறுத்தினாலும் கேட்கவே மாட்டார்.
வீட்டிற்கு யார் வந்தாலும் டீ, காபி கொடுக்காமல் அனுப்ப மாட்டார். அவரின் விருந்தோம்பல் எங்களுக்கே ஆச்சர்யம். எல்லோரிடமும் அன்பு நிறைந்த சொற்களால் மட்டுமே பேசுவார்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். பாரம்பர்ய சிறுதானியங்கள், கீரை வகைகள் ஆகியவைதான் அவரின் ஆக்டிவ் சீக்ரெட்" என்றார்.
வீட்டுத்தோட்டத்திலிருந்து பறித்து வந்த கீரைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த தேவியம்மாளிடம் பேசுகையில், "வீட்டுத் தோட்டத்தில் நானே விளைவிக்கும் கீரை காய்கறிகளைத்தான் தினமும் சாப்பிட்டு வருகிறோம். 4 வகையான கீரைகள், காய்கறிகள் இருக்கின்றன.

வீட்டுத் தேவைக்குப் போக அக்கம்பக்கத்தினருக்குக் கொடுத்து விடுவேன். எல்லோரிடமும் அன்பாகப் பழக வேண்டும். இருப்பதை அனைவரும் பகிர்ந்து சாப்பிட வேண்டும். அது தான் என்னுடைய விருப்பம் " என்றவர் எங்களையும் கீரைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு வற்புறுத்தினார். அவரின் விருந்தோம்பலும் ஈகை பண்பும் உண்மையில் நமக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.