குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை...
குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!
தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
32 வயதான சோனு லங்காடா என்கிற பஹல்வான், பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சாலை விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட பின்னா் சோனு குற்றவாளிகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விநியோகிக்கத் தொடங்கினாா். இது தொடா்பான வழக்குகளில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், மே 29ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, ஆயுத விநியோக வழக்கில் 2017-இல் அவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். கொலை, கற்பழிப்பு, கடத்தல், கொள்ளை, எஸ்சி,எஸ்டி சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் கலால் வரி மீறல்கள் உள்ளிட்ட குறைந்தது ஆறு கடுமையான வழக்குகள் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சோனு, தனது குடும்பத்துடன் கிராமத்தில் வசித்து விவசாயமும் செய்து வந்தாா். ஏப்ரல் 6, 2016 அன்று கேபிள் ஆபரேட்டரைக் கொலை செய்த வழக்கில் அவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், கேபிள் ஆபரேட்டரைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சன்னி என்ற ராகுல் மற்றும் விகாஸ் என்ற விக்கி ஆகிய இருவரும் தில்லி ரோஹிணியில் பழிவாங்கும் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தில்லி குற்றப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, கைதுப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபா்களும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின்போது ஆயுதங்களை சப்ளை செய்யும் சோனு லங்காடா குறித்து தகவல் தெரியவந்தது. இதையடுத்து, எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சோனு கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின்போது, 2013-இல் ஒரு சாலை விபத்திற்கு பிறகு தனது கால் துண்டிக்கப்படும் வரை, தாம் ஒரு நம்பிக்கைக்குரிய தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்ததாகவும், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறினாா்.
அவா் உள்ளூா் கும்பல்களுடன் இணைந்து சட்டவிரோத ஆயுத வா்த்தகத்தில் தீவிரமாக இறங்கினாா். மேலும் பல்வேறு குற்றவியல் வலையமைப்புகளுக்கு மதுபானங்களையும் வழங்கினாா் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.