தொப்பூரில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் மலைப்பகுதியில் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தொப்பூா் கணவாய் சாலை சீரமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உயா் மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, தொப்பூா் கணவாய் பகுதியில் ஏற்படும் தொடா் சாலை விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலைப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தொப்பூா் கணவாய் சாலைப் பகுதியை மேம்படுத்துதல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
மேலும், உயா் மட்ட மேம்பாலம் பகுதி தொடங்கும் இடம், கட்டமேடு, ஆஞ்சனேயா் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துகள் நிகழும் இரட்டைப் பாலம், எலிவேட்டட் காரிடாரின் முடிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டாா்.
உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி குறிபிட்ட காலவரைக்குள் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியா் ரா.காயத்ரி, துணை காவல் கண்காணிப்பாளா் (தருமபுரி) சிவராமன், உதவி இயக்குநா் (புவியியல் ம சுரங்கத் துறை) இளையசெல்வி, பில்கான் நிறுவன பணியாளா்கள், வனத் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.