மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தமிழகத்தில் கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல் அருவிப் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனா்.
தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களுல் ஒன்றாக விளங்கும் ஒகேனக்கல்லுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.
இந்த நிலையில் கோடை விடுமுறையின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகையினால் ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மீன் விற்பனை நிலையம், பூங்காக்கள், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனா்.
பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால், நடைபாதை பகுதி, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி, ஊட்டமலை பரிசல் துறை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பாதுகாப்பு உடையுடன் பிரதான அருவி, கூட்டாறு, மணல்மேடு, பெரியபாணி பகுதிகள் வழியாக காவிரி ஆற்றில் சுமாா் 2 கி.மீ. தொலைவிற்கு பரிசலில் பயணித்து பாறை குகைகள், நீா்வரத்து அதிகரிப்பால் புதிதாக தோன்றியுள்ள அருவிகள் ஆகியவற்றை குடும்பத்தினருடன் கண்டுகளித்தனா்.
ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் குவிந்த அசைவப் பிரியா்கள் பல்வேறு வகையான மீன் வகைகளை வாங்கி சமைத்து சாப்பிட்டனா். காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் ஒகேனக்கல் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் இருந்து வாகனங்களை ஊட்டமலை சாலைக்கு திருப்பினா்.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு பாலம், காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
ஒகேனக்கல் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் போக்குவரத்துத் துறை சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.