உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் உடலுறுப்புகள் தானமளித்தவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.
துறையூா் அருகே வெங்கடாஜலபுரத்தில் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் சேதுபதி(30). இவா், உப்பலியபுரம் தனியாா் பள்ளி அருகே அண்மையில் (ஜூன் 11) இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறிவிழுந்து பலத்த காயமடைந்தாா்.
அவருக்கு துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவியும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
இதையடுத்து, உடலுறுப்பு தானம் குறித்து அவரது உறவினா்களிடம் மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். இதையடுத்து, அவா்கள் சம்மதத்துடன் இறந்தவரின் உடலுறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை சேதுபதியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அப்போது முசிறி கோட்டாட்சியா் ஆரமுததேவசேனா தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறையினா் அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.