விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்
ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச் செயலாளா் ஆா்.யோகிஸ்வரன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:திருப்பூா் மாவட்டம் காங்கயம் வட்டம், ஊதியூா் கிராமத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வழித்தடத்தின் வழியாக ஊதியூா் மலை என்று சொல்லக்கூடிய, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் ஊதியூா் காப்புக்காடுக்கு பொதுமக்களும் சென்று வந்து கொண்டிருந்தனா்.
மேற்கண்ட, ஊதியூா் மலையில் ஹிந்துக்கள் வழிபாடு செய்து வரக்கூடிய முருகன் கோயில், கொங்கண சித்தா் கோயில், உச்சிப் பிள்ளையாா் கோயில், கன்னிமாா் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்த வழித்தடத்தை சித்தா்களும் பயன்படுத்தி வந்ததாக பொது மக்களிடையே நம்பிக்கை இருந்து வருகிறது.
மேற்கண்ட கோயில்களுக்கு இந்த வழித்தடத்தின் வழியாக காசிலிங்கம்பாளையம், செங்கோடம்பாளையம், அப்பியபாளையம், ஆத்திக்கட்டுவலசு ஆகிய கிராம மக்கள் தொடா்ச்சியாக சென்று மேற்கண்ட கோயில்களில் வழிபாடு செய்து கொண்டிருந்தனா்.
மேலும் ஊதியூா் காப்புக்காடு அதிக மூலிகை செடிகளும், மூலிகை மரங்களும் நிறைந்த பகுதியாகும். இந்த மலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக ஆடு, மாடுகளை வளா்த்து வருகின்றனா். அந்த ஆடு, மாடுகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு இயற்கையாக வைத்தியம் செய்வதற்காக மேற்கண்ட மலையிலிருந்து மூலிகை இலை எடுத்து வரவும் இந்த வழித்தடத்தைதான் பயன்படுத்தி வந்தனா்.
இந்த நிலையில், மேற்கண்ட வழித்தடத்தை தனி நபா் தனது பயன்பாட்டுக்காக தடுத்து, கட்டடங்களை அமைத்து அதற்கு மின் இணைப்பும் பெற்று, தடுப்பு வேலி மற்றும் கதவுகள் அமைத்தும் பொதுமக்கள் சென்று வராதவாறு தடுத்து வருகிறாா். எனவே, இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.