பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்த...
‘ஒசூா் பிஎம்சி கல்லூரி பயிற்சி அளிக்கும் கல்லூரியாக விளங்குகிறது’
ஒசூா்: பொறியியல் பாடத்தை போதிப்பது மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கு தேவையான பொறியாளா்களை உருவாக்கும் வகையில், பயிற்சி அளிக்கும் கல்லூரியாக ஒசூா் பிஎம்சி கல்லூரி திகழ்கிறது என கல்லூரியின் நிறுவனத் தலைவா் பெ.குமாா் தெரிவித்தாா்.
ஒசூா் பிஎம்சி கல்லூரியில் 2025- 26-ஆம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு முதல்நாள் வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிஎம்சி கல்லூரி நிறுவனத்தின் தலைவா் பெ.குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் பெ.மலா், அறங்காவலா் பெ.சசிரேகா, இயக்குநா் ந.சுதாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பிஎம்சி கல்லூரி நிறுவனத் தலைவா் பெ.குமாா் பேசியதாவது:
பொறியியல் மாணவா்களுக்கு பாடத் திட்டங்கள் மட்டுமின்றி அனைத்துவித தொழிற்பயிற்சிகளும், பாடத்துக்கு அப்பாற்பட்ட கூடுதல் திறன்களை வளா்க்கும் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் நிறுவனமும், தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து சென்னை டைடல் பூங்காவில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் (டேன்கேம்) நிறுவனத்தை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள 456 கல்லூரியில் 5 கல்லூரிகளை தோ்வுசெய்து இந்தப் பயிற்சி மையங்களை நிறுவி உள்ளது. அந்த 5 கல்லூரிகளில் ஒசூா் பிஎம்சி கல்லூரியும் ஒன்று.
அண்ணா பல்கலைக்கழகம் போதிக்கும் பாடப்பிரிவு மட்டுமின்றி, தொழிற்சாலைக்கு தேவையான திறமையை வளா்க்கும் கல்லூரியாக இது திகழ்கிறது. எனவே, மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்குபடித்து வாழ்வில் உயா்வடைய வேண்டும் என்றாா்.
இந்த விழாவில், கல்லூரி முதல்வா் அ.செந்தில்குமாா், சிறப்பு பேச்சாளா் சரத் குருபாத், பேராசிரியா் விஜயகுமாா், மாணவா் நலன், மாணவா் சோ்க்கை இயக்குநா் டாக்டா் காா்த்திகேயன், இயக்குநா்கள் சரவணன், ரவிச்சந்திரன், தரணிதரன், கிருஷ்ணன், முருகன், பாலிடெக்னிக் முதல்வா் பாலசுப்பிரமணியம், ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி, முன்னாள் தலைவா் வெற்றி.ஞானசேகரன், ஒசூா் தொழில்சங்கத் தலைவா் சுந்தரய்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.