ஒன் பை டூ
சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
“ ‘நந்தனார் கல்விக் கழக’ மேடையில்தான் ஆளுநர் இவ்வாறு பேசியிருக்கிறார். ‘அந்த நந்தனாரை யார் கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தது?’ என்பது ஆளுநருக்குத் தெரியுமா... அவர் சொல்லும் அந்தத் தீய சக்தியே ஆளுநர் ஆதரிக்கும் சனாதனம்தான். அதை எதிர்த்துத்தான், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று சட்டமியற்றியது தி.மு.க அரசு. அதோடு சாதி, மதப் பிரிவினைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிவருகிறது. அதன் பலனாகத்தான் தமிழக மக்கள் ஒற்றுமையாக இருந்துவருகிறார்கள். தமிழ்நாட்டின் இந்தச் சமூகக் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளாமல், வாய்க்கொழுப்பால் உளறிக்கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி. தமிழகத்தில் ஆதிதிராவிடப் பிரிவு உட்பட பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த பலரும் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, துணைவேந்தர்களாக இன்னும் பல பெரிய பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கெல்லாம் இங்கு திராவிட இயக்கங்கள் கட்டமைத்துவைத்திருக்கும் சமூக நீதியும், சமத்துவமும்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அஜண்டாவை இப்படி மேடைக்கு மேடை பேசி மக்களிடையே பிரிவினையைத் தூண்டினால், தமிழக மக்களே விரைவில் ஆளுநரை விரட்டுவார்கள்!”
கரு.நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அரை நூற்றாண்டாகத் தமிழகத்தில் நடந்துவரும் விஷயங்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, அவர் சொல்லியிருக்கும் கருத்தாகவே இதைப் பார்க்கிறேன். தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று ஆதரவாகக் குரல் கொடுக்கும்போதுகூட, ஆளுநரை ஒரு தரப்பு வசைபாடுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக, திராவிடக் கட்சிகள் பட்டியலின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் இன்றளவும் பல பகுதிகளில் பட்டியலின மக்களால் கோயிலுக்குள் போக முடியாத நிலை இருக்கிறது. ஆனால் கக்கன், பரமேஸ்வரன் போன்றவர்களுக்கு அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை எனப் பல முக்கியமான துறைகளைக் கொடுத்திருந்தார் காமராஜ். இதை தி.மு.க அமைச்சரவையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், யார் உண்மையான சமத்துவ, சமூக நீதிக் கொள்கையுடன் பணியாற்றினார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். `திராவிட மாடல்’ என்று ஒரு போலியான சமூக, சமத்துவத்தைப் பேசுகிறார்கள். அதைச் செயலில் காட்ட முழுமையாகத் தவறிவிட்டது தி.மு.க. இந்தியாவிலேயே பட்டியலினச் சமூகத்தினருக்கு பா.ஜ.க-வைவிட வேறு யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை!”