கச்சத்தீவில் திருவிழா: ராமேஸ்வரத்திலிருந்து 100 படகுகளில் பக்தர்கள் பயணம்
இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதையொட்டி அங்கு சீனி குப்பன் என்ற மீனவரால் அந்தோணியார் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நாளடைவில் இங்கு இருநாட்டு மீனவர்களும் சேர்ந்து ஆண்டு தோறும் விழா கொண்டாடி வந்தனர். இலங்கையில் தமிழர் பிரச்னை போராக வெடித்ததை தொடர்ந்து இந்த விழா தடை பட்டு போனது.

2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அந்தோணியார் ஆலய திருவிழா மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசு புதிய ஆலயம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பியுள்ளது. இவை தவிர இங்கு நிரந்தர கடற்படை மையத்தினையும் இலங்கை அரசு நிறுவியுள்ளது.

இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கச்சத்தீவு திருவிழா தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிபடுவதுடன், இரு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தங்களின் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வந்ததால் கடந்த ஆண்டு நடந்த கச்சத்தீவு திருவிழாவில் இந்திய மீனவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவினை தொடர்ந்து சிலுவை பாதை, தேர்பவனி, கூட்டு திருப்பலி ஆகியன நடக்கின்றன. நாளை காலை சிறப்பு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.

இன்று நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 3400 பக்தர்கள் கச்சத்தீவு செல்கின்றனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 78 விசைப்படகுகள் மற்றும் 22 நாட்டுப்படகுகளில் பாதிரியார்கள், பக்தர்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.
கச்சத்தீவு செல்லும் பக்தர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ''கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், படகோட்டிகள் என அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படகில் செல்லும் பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி அளிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் சுங்கத்துறையினரின் 2 படகுகளில் மருத்துவர் குழு தயாராக இருப்பார்கள். முதல் குழுவாக 7 படகுகள் சென்றுள்ளன. தொடர்ந்து அனைத்து படகுகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் திருவிழா முடிந்தவுடன் நாளை காலை இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் திரும்புவார்கள்'' என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
