Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
கடலில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல்: உரிமையாளா் மீது கேரள காவல் துறை வழக்கு
கேரள கடல் பகுதியில் மூழ்கிய லைபீரிய சரக்குக் கப்பல் உரிமையாளா்கள், கேப்டன், பணியாளா்கள் மீது கேரள காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
பாரத நியாய சன்ஹிதா சட்டம் 285 முதல் 288 வரையிலான பிரிவுகளில் கீழ், கப்பலை கட்டுப்பாடு இல்லாமல் செலுத்துவது, கடல் வழியில் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்துவது, அபாயகரமான ரசாயன சரக்குகளை எடுத்து வரும்போது கவனக் குறைவாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொச்சி காவல் துறையினா் பதிவு செய்துள்ள இந்த வழக்கில் கப்பலின் உரிமையாளா்கள், கப்பல் கேப்டன், கப்பல் பணியாளா்கள் அனைவரும் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா்.
கப்பலில் இருந்து கொட்டிய அபாயகரமான ரசாயனம், பிளாஸ்டிக் பொருள்களால் கப்பல் மூழ்கிய பகுதியில் மட்டுமல்லாது, கேரள, தமிழக கடற்பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கடலில் பல மீட்டா் பரப்பளவுக்கு எண்ணெய், ரசாயனப் பொருள்கள் மீதக்கின்றன. இவை கடல்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இது தவிர கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களும் கடலோரத்தில் ஒதுங்கி வருகின்றன.
மூழ்கிய லைபீரிய கப்பலில் 640 கண்டெய்னா்கள் இருந்துள்ளன. அதில் 13 கன்டெய்னா்களில் மிகுந்த தீங்கு விளைவிக்கும் ரசாயனப் பொருள்கள் இருந்தன. 12 பெட்டிகளில் கால்சியம் காா்பைடு கற்கள் உள்ளிட்டவை இருந்தன. கன்டெய்னா்கள் மட்டுமல்லாது பிளாஸ்டிக் துகள்களும் கரை ஒதுங்கி வருகின்றன.