கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை!
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை இன்று(மே 12)நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சித்திரை மாதம் பெளர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 11 ஆண்டுகளுக்கு மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 133 வது பெளர்ணமி தரிசனம் நடைபெற்றது.
இன்று நண்பகல் 12 மணிக்கு சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனைவுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருள்ஆசி பெற்றனர்.
அதனை தொடர்ந்து, மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார்.
இந்நிகழ்வில் பட்டாபிராம் ஸ்ரீதேவி நாக கருமாரி அம்மன் ஆலய ஸ்ரீ ஸ்ரீ தரன் சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அரவிந்த் பாபு, திண்டிவனம் அரசு வழக்குரைஞர் அறிவழகன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரன், சென்னை, மடிப்பாக்கம் கணேஷ், சுனந்தா மற்றும் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் தனலட்சுமி ராஜசேகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சித்தரிடம் அருள் ஆசிபெற்றனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா ஸ்வாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் ஏற்பாடு செய்ந்திருந்தனர். இதில் நிர்வாக அறங்காவலர் ஆர்.துளசிங்கம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் டி.கண்ணண், கே.ஆர்.சுரேஷ், வி.கமலக்கண்ணண், வழக்குரைஞர் சுரேஷ், பி.பரந்தாமன் முன்னிலையில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: ரயிலைக் கவிழ்க்க சதி: வட மாநில நபர் கைது