கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி நிலுவை வைத்துள்ளன சர்க்கரை ஆலைகள்!
புதுதில்லி: அரசு தரவுகளின் அடிப்படையில், நடப்பு ஆண்டு 2024 அக்டோபர் முதல் மார்ச் 5ஆம் தேதி வரை சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா, விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை வழங்குவது என்பது ஒரு தொடர்ச்சியான செயல் முறையாகும் என்றார்.
விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதற்கு வசதியாக, கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதாய விலையை நிர்ணயிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில், உபரி சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிட அனுமதித்துள்ளது.
நடப்பு ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை சர்க்கரையின் விலை வீழ்ச்சியடைவதையும் மற்றும் கரும்பு நிலுவைத் தொகை குவிவதைத் தடுக்க, 10 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்தது. அதே வேளையில் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.31 ஆக நிர்ணயித்தது.
இதனால் 99.9 சதவிகிதத்திற்கும் அதிகமான கரும்பு நிலுவைத் தொகை 2023-24ல் செலுத்தப்பட்டது. நடப்பு சர்க்கரை பருவம் 2024-25ல் மார்ச் 5, 2025 நிலவரப்படி 80 சதவிகிதத்திற்கும் அதிகமான கரும்பு நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
கரும்பு விவசாயிகளின் மொத்த நிலுவைத் தொகை ரூ.15,504 கோடியாகும். இது உ.பி.யில் உள்ள சர்க்கரை ஆலைகள் ரூ.4,793 கோடியும், கர்நாடகவில் ரூ.3,365 கோடியும், மகாராஷ்டிரத்தில் ரூ.2,949 கோடியும், குஜராத்தில் ரூ.1,454 கோடியும் ஆகும்.
இதையும் படிக்க: ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!