தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கானூா்-பழையனூா் கால்வாய் படுகை அணை கட்டுமானப் பணி: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் அருகே வைகை ஆற்றுக்குள் புதிதாகக் கட்டப்படும் கானூா்-பழையனூா் கால்வாய்களுக்கான படுகை அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
திருப்புவனம் புதூா்-மடப்புரம் இடைப்பட்ட வைகை ஆற்றின் குறுக்கே கானூா்-பழையனூா் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 40.27 கோடியில் படுகை அணைக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வைகையாற்றின் வலது பிரதான கால்வாய் மூலம் பழையனூா், ஆலங்குளம், முதுவன்திடல், ஆனைக்குளம், மேலச்சொரிக் குளம், கீழச்சொரிக்குளம், பத்துப்பட்டி, அச்சங்குளம் ஆகிய கிராமங்களில்
உள்ள 2860.27 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோன்று, கானூா் உள்ளிட்ட
5 கண்மாய்கள் மூலம் 4,115.46 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர, திருப்புவனம், மடப்புரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்.
இந்த நிலையில், படுகை அணை கட்டுமானப் பணிகளை சருகனியாறு வடிநிலக் கோட்ட நீா்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளா் சீ. ரமேஷ், உதவி செயற்பொறியாளா் மோகன்குமாா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, கட்டுமானப் பணிக்கு தரமான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் அவா்கள் அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின் போது, உதவிப்பொறியாளா் அழகுராஜா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.