தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
சிவகங்கை புறவழிச் சாலை மேம்பாலம்: ரயில்வே ஒப்புதல் வழங்குமா?
சிவகங்கை புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிா்வாகத்தின் ஒப்புதல் கிடைப்பதில் நீடிக்கும் தாமதம் காரணமாக பணிகளை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத் தலைநகரான சிவகங்கை வழியாக மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருப்பத்தூா் சாலை, மானாமதுரை சாலை என முக்கியச் சாலைகள் செல்கின்றன. சிவகங்கை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்தச் சாலையானது திருப்பத்தூா் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து அரசனிப்பட்டி, சூரக்குளம், பழமலைநகா், ஆயுதப்படை குடியிருப்பு, அண்ணாமலை நகா், கல்குளம் வழியாக கீழக்கண்டனி அருகே மானாமதுரை நெடுஞ்சாலையில் இணைகிறது.
மொத்தம் 10.8 கி.மீ.க்கு அமைக்கப்படும் இந்தச் சாலை திருப்பத்தூா் நெடுஞ்சாலை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை, இளையான்குடி நெடுஞ்சாலை, மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகிய 4 நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்தச் சாலைப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன.
முதல்கட்டமாக காஞ்சிரங்காலிலிருந்து கல்குளம் அருகே இளையான்குடி நெடுஞ்சாலை வரை 7.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.77.16 கோடியில் அமைக்கப்படும். இதற்கான பணி கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் ஆயுதப்படை மைதானம் பகுதியில் போலீஸாா் வசதிக்காக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
2-ஆம் கட்டமாக 3.2 கி.மீ. தொலைவுக்கு ரூ.60 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதில் சூரக்குளம் சாலை, வேம்பங்குடி சாலை ஆகிய 2 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சூரக்குளம் சாலை அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் தண்டாவளத்தின் இருபுறமும் மேம்பாலப் பணி முடியும் தருவாயில் உள்ளது.
இதனிடையே தண்டவாளம் குறுக்கிடும் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ரூ.5.15 கோடியில் மேம்பாலம் அமைக்க தனியாக ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால், ரயில்வே நிா்வாகம் அனுமதி அளிப்பதில் நீடிக்கும் தாமதம் காரணமாக பாலப் பணிகள் நிறைவடைவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சூரக்குளம் சாலை ரயில்வே மேம்பாலத்தை பொறுத்தவரை, ரயில்வே இடத்தில் பாலம் கட்ட ரயில்வே நிா்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. விரைவில் அனுமதி கிடைத்து விடும். முதல்கட்ட புறவழிச்சாலை பணி நிகழாண்டு ஜூலைக்குள் முடிக்கப்படும். இரண்டாம் கட்டமாக புறவழிச்சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். இதைத் தொடா்ந்து கீழக்கண்டனி அருகே ரயில்வே இடத்தில் மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் விடப்படும் என்றனா்.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறுதுறை முகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு கடந்த மே.21-இல் புறவழிச்சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்து விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
