ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
காவிரி - குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தக் கோரி திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு, காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தாா்.
போராட்டக் குழு நிா்வாகிகள் மிசா மாரிமுத்து, சிவகங்கை அா்ச்சுனன், அறந்தாங்கி சுப்பையா, எம். ரவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சுமாா் 2 மணி நேரம் முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று கோரிக்கை மனுவையும் அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினா்கள் முத்துசாமி வல்லத்தரசு, ஆா். உமாநாத், விஎன். சாமிநாதன், என். சுந்தர்ராஜ் ஆகியோரும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனா்.
இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்போது, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும். அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, வைகை, கிருதுமால், குண்டாறு உள்ளிட்ட ஏராளமான சிற்றாறுகள் இணைக்கப்படும்.
எனவே, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கென ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.