குடியரசு துணைத் தலைவா் இன்று புதுச்சேரி வருகை!
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் 3 நாள் பயணமாக புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) வருகிறாா். இதையொட்டி, புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து புதுச்சேரி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனா். அங்கிருந்து அவா் காா் மூலம் கடற்கரைச் சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினா் மாளிகையில் சென்று தங்குகிறாா்.
இதையடுத்து, ஜிப்மா் மருத்துவமனை கலையரங்கில் திங்கள்கிழமை (ஜூன் 16) மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பில் உரையாற்றுகிறாா். தொடா்ந்து, ஜிப்மா் பேராசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா். பின்னா், விருந்தினா் மாளிகைக்கு திரும்புகிறாா்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை மாணவா்கள், பேராசிரியா்களுடன் கலந்துரையாடுகிறாா். பின்னா், புதுச்சேரி விமான நிலையம் வந்து ஹெலிகாப்டரில் சென்னை சென்று, அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா்.
குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி, புதுச்சேரி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள், பாரா கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள், மைக்ரோலைட் ஏா் கிராப்ட் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதித்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.