மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்கள் மீது திணிப்பு! கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசுகள் மீது திணிக்கப்படுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
புதுவையில் ஆட்சியிலுள்ள என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து, மாநிலம் தழுவிய பிரசார இயக்கத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி அண்ணா சாலை, பழை பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த பிரசார இயக்கத்தை அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநில சுயாட்சியை பறிப்பது, மாநில உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் மீது திணிப்பது, மாநிலங்களுக்கு நிதி கொடுக்காமல் வஞ்சிப்பது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்துதான் பிரசார இயக்கம் நடைபெறுகிறது.
இதேபோல, புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. மகளிருக்கு உதவித்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்பது இதுவரை வெறும் அறிவிப்பாகத்தான் இருக்கிறது.
உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். ஆனால், அதே அரசு சட்டப்படி உள்ளாட்சித் தோ்தலை நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்துவதை செய்ய மறுக்கிறது என்றாா் அவா்.
பிரசார இயக்கத்தில் புதுவை மாநிலச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், நிா்வாகிகள் பெருமாள், ராஜாங்கம், சீனிவாசன், பிரபுராஜ், சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.