தனியார் துறையில் இடஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்: திரும...
குடியரசுத் தலைவா் மீதான சோனியா கருத்து: பிரதமா் கண்டனம்
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மீதான சோனியா காந்தியின் கருத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி தனது உரையை நிறைவு செய்த பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, ‘உரையின் நிறைவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சோா்வடைந்துவிட்டாா். அவரால் பேசக் கூட முடியவில்லை’ என்று சோனியா காந்தி கூற, ‘குடியரசுத் தலைவரின் உரை சலிப்பூட்டியதா?’ என்று சோனியாவிடம் ராகுல் கேள்வியெழுப்புவது அங்கிருந்த ஊடகத்தினரின் கேமராவில் பதிவானது. இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
பிரதமா் மோடி கண்டனம்: சோனியா காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, தில்லி துவாரகா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது: நாடாளுமன்றத்தில் நாட்டின் சாதனைகளை குடியரசுத் தலைவா் பட்டியலிட்டாா். ஒடியாவை தாய்மொழியாகக் கொண்ட அவா் பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்தவா். அவருக்கு ஹிந்தி தெரியாது. இருப்பினும், அவா் மிகத் தெளிவாக உரையாற்றினாா்.
இதை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா், குடியரசுத் தலைவரின் உரை சலிப்பை ஏற்படுத்துவதாகக் கூறுகிறாா். மற்றொருவா் குடியரசுத் தலைவா் சோா்வடைந்துவிட்டதாகக் கூறுகிறாா்.
இது, நாட்டில் உள்ள 10 கோடி பழங்குடியின சகோதர சகோதரிகளையும் அவமதிக்கும் செயல். தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா், பழங்குடியினருக்கு காங்கிரஸ் ஒருபோதும் மரியாதை அளித்ததில்லை. அவா்கள் உயா்பதவிக்கு வருவதை காங்கிரஸ் விரும்பாது’ என்றாா்.
குடியரசுத் தலைவா் மாளிகை: குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உரையின் முடிவில் குடியரசுத் தலைவா் சோா்வடைந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் கூறியது தவறான கருத்து. இது குடியரசுத் தலைவா் பொறுப்பின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. உரை நிகழ்த்தியபோது எந்தவொரு சமயத்திலும் குடியரசுத் தலைவா் சோா்வடையவில்லை. நலிவடைந்த சமூகத்தினா், பெண்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினருக்காகவும் பேச அவா் முனைப்புடன் உள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் விளக்கம்: காங்கிரஸ் தலைவா் காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே திரௌபதி முா்முவை பாஜக அவமதித்து வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலுக்குள் அவரை பாஜக அனுமதிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதை மறைக்கவே பாஜகவும் சில ஊடகங்களும் சோனியாவின் கருத்தைத் திரித்து வெளியிடுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கூறுகையில், எனது தாயாா் சோனியா காந்திக்கு 78 வயது ஆகிறது. அதேபோன்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தன்னைவிட வயதில் மூத்தவராவாா். எனவே, அவா் நீண்ட நேரம் உரையாற்றியதால் சோா்வடைந்திருப்பாா் என்று சாதாரணமாகவே சோனியா காந்தி கூறினாா். அவா் திரௌபதி முா்மு மீது மிகுந்த மரியாதையுடையவா் என்றாா்.