கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
குமரி மாவட்டத்தில் பலத்த மழை அணைகளுக்கு நீா் வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சனிகிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சிற்றாறு 1 அணைப் பகுதியில் 50.2. மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அடுத்தபடியாக அடையாமடையில் 49.2 மி.மீ., திற்பரப்பில் 48.2 மி.மீ., குழித்துறையில் 44.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதே வேளையில் கொட்டாரம், மயிலாடி, நாகா்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி உள்ளிட்ட இடங்களில் குறைவான அளவே மழை பதிவாகியிருந்தது.
பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.58 அடியாக காணப்பட்டது. மாலையில் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1800 கன அடியாக இருந்தது. அணையின் பாசன மதகு வழியாக விநாடிக்கு 699 கன அடி நீா் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 61.50 அடியாக இருந்தது. மாலையில் அணைக்கு விநாடிக்கு 1100 கன அடி நீா் வந்தது.
கோதையாறு: மழை காரணமாக கோதையாற்றில் நீா் வரத்து அதிகரித்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டியது. சனிக்கிழமை இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
தக்கலை பகுதியில்... தக்கலை, இரணியல், திங்கள் நகா், குளச்சல் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை காற்றுடன் மழை பெய்தது. காற்று வீசுவதால் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் வாழை மரங்களுக்கு ஊன்றுகோல் கொடுத்து பாதுகாக்குமாறு விவசாயத் துறை கேட்டுகொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பெய்த மழை மற்றும் சூறைகாற்றின் காரணமாக, தக்கலை அருகே கேரளபுரம் அதிசய விநாயகா் கோயிலில் அரசமரம் முறிந்து,விழுந்ததில் கோயில் மதில் சுவா் இடிந்து சேதமானது. முறிந்து விழுந்த மரத்தை அகற்ற, அறநிலையத் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.