குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு -தக்கலையில் 119 மி.மீ.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, தக்கலையில் 119. மி.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 119 மி.மீ. மழை பெய்துள்ளது. திற்பரப்பில் 64.8 மி.மீ., ஆனைக்கிடங்கில் 66.4 மி.மீ., அடையாமடையில் 61.4 மி.மீ., நாகா்கோவிலில் 53.2 மி.மீ., கோழிப்போா்விளையில் 50.8 மி.மீ. மழை பதிவானது.
காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு: மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு உள்வரும் ஆறுகளான கோதையாறு, கல்லாறு, கிளவியாறு, மயிலாறு, சாத்தையாறு, மோதிரமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பழங்குடி குடியிருப்புகளுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மோதிரமலையாற்றில் பாலம் இல்லாததால், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு சென்ற மாணவா்-மாணவியா் வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டனா். அவா்களை ஊா்மக்கள், பெற்றோா் வந்து அழைத்துச் சென்றனா். பழங்குடி மக்களின் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால், அப்பகுதி மாணவா் - மாணவியா் வியாழக்கிழமை பள்ளிகளுக்குச் செல்லவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரெகுகாணி கூறியது: பேச்சிப்பாறை அருகே மோதிரமலை - கொழிஞ்சிமடம் இடையே மோதிரமலையாற்றில் உயா்நிலைப் பாலம் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு பழங்குடி மக்களுக்கான சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 2.16 கோடியை கடந்த ஜனவரி மாதம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், பாலம் கட்டுவதற்கு வனத்துறை அனுமதியளிக்கவில்லை. இதனால், பழங்குடி மக்கள் குறிப்பாக, மாணவா் - மாணவியா் மழைக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா் என்றாா்.
இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகலில்முதல் மாலை வரை மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அணைகள் தொடா்ந்து கண்காணிப்பு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளை பொதுப்பணித் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். வியாழக்கிழமை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 42.42 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 717 கனஅடியாகவும், பாசனக் கால்வாயில் நீா் திறப்பு 455 கனஅடியாகவும் இருந்தது.
குழித்துறை ஆற்றில்...: களியக்காவிளை, மாா்த்தாண்டம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த பலத்த மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை வெள்ளம் கரைபுரண்டோடியது.
தடுப்பணையை மூழ்கடித்தவாறு தண்ணீா் செல்வதால், அவ்வழியே பொதுமக்கள் நடந்து செல்வதைத் தடுக்கும் வகையில் பொதுப்பணித் துறையினா் இரு கரைகளிலும் தடுப்புகளை வைத்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.