பைக் இல்லையா..? அப்போ வரதட்சிணையாக சிறுநீரகம் வேண்டும்..! மருமகளை அதிர்ச்சியடைய ...
"கூட்டணி ஆட்சி அமையும் எனச் பேசியிருக்கிறாரே?" - அமித்ஷா பேச்சிற்கு ஆர்.பி.உதயகுமார் மழுப்பல் பதில்
எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்த நினைத்தாலும் மக்களும், அதிமுக தொண்டர்களும் தெளிவாக உள்ளனர் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமைதி பூங்காவாகத் திகழ்ந்த தமிழ்நாட்டில் அணு குண்டு விழுந்ததைப் போல திமுக ஆட்சி அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் இதுவரை 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளன, 2021 - 26 திமுக ஆட்சிக் காலம் மிக மோசமான ஆட்சிக் காலமாக மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும்.
சோழர்களின் காலம் பொற்காலம் எனச் சொல்வது போல ஸ்டாலின் ஆட்சிக்காலம் வேதனையின் காலமாக அமையும்.
தனி நபர் வளர்ச்சி அடையாத நிலையில் தமிழ்ச் சமுதாயம் வளர்ந்து விட்டது எனச் சொல்வது சுத்தப் பொய். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் அரக்கோணம் பெண் வரை பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்றவரிடம்,
"மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியுள்ளாரே?" எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.

"சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு வீட்டுக்குப் போகும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டனர், எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எப்படி திசை மாற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் குழப்பமின்றி தெளிவாக உள்ளோம்" என்று அமித்ஷாவின் கருத்துக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கிளம்பிச் சென்றார்.