கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்
சிவங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் இந்திய தொல்லியல் துறை ஆய்வு அகழாய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வில் தமிழர் நாகரிக வரலாறு மிகத் தொன்மையானது என்று கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு ஆய்வறிக்கையைக் கடந்த 2023-ல் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

ஆனால், இந்த ஆய்வறிக்கை கிடப்பில் போடப்பட்டு, இன்னும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசால் திருப்பியனுப்பப்பட்டது.
இதனால், தமிழர்களின் வரலாற்றை பா.ஜ.க அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்தன.
இத்தகைய சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், "கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரியவேண்டியிருக்கின்றன.
எனவே, அத்தகைய அறிவியல்பூர்வ முடிவுகள் வந்த பிறகே கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க முடியும்." என்று கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள்.
அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள்.
இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5,350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?

தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா? மறந்து விடாதீர்கள்.
வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது.
அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?" என்று எக்ஸ் தளத்தில் பா.ஜ.க-வை விமர்சித்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கின் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் சு.வெங்கடேசன், "இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை.
ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.

கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
“அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார்.
கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது.
ஆனால் அந்த மாட்டுக் கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே." என்று பதிவிட்டிருக்கிறார்.