மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
DMK : 'ஓசி பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு ஏரோப்ளேன் கேட்காதீங்க..' - தேனி திமுக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!
தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ மகாராஜன் மக்களை பார்த்து, 'ஓசி பஸ்லதான போறீங்க?' என பேசியிருக்கும் வீடியோ சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

'எம்.எல்.ஏவின் சர்ச்சைப் பேச்சு!'
ஆண்டிப்பட்டியின் மண்ணூத்து கிராமத்தில் சமூகநல கூடத்தை திறந்து வைத்த மகாராஜன், 'இங்க இருக்குற மர மட்டையெல்லாம் வாடிப் போய் இருந்துச்சுல்ல. இந்த மகராசன் எம்.எல்.ஏ வாக வந்த பிறகுதான் மழை பெய்து ஆற்றில் தண்ணீர் ஓடுது. நாங்க ஆட்சிக்கு வந்தா 4 மணி வரைக்கும் கஷ்டப்படாம வேலை செய்யுங்க, அப்புறம் ஓசி பஸ்ல ஏறி தேனி போங்க, ஆண்டிப்பட்டி போங்கன்னு சொன்னோம், சொன்னதை செஞ்சிருக்கோம்.
இங்கேயும் ரோடு போட போறோம். பஸ்ஸூ விடப்போறோம். நீங்களும் ஓசியாத்தான் போகப்போறீங்க. பஸ்ஸூ கொடுத்துட்டோம்னு அடுத்து ஏரோப்ளேன் கேட்காதீங்க.' எனப் பேசியிருந்தார்.

'அண்ணாமலை கண்டனம்!'
இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, 'பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?
வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.' எனக் கூறியிருக்கிறார்.