``பாலியல் புகார் கூறி ரூ.65 கோடி கேட்டு டிவி சேனலுக்கு மிரட்டல்..'' - 2 பேரை கைது செய்த போலீஸார்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஷாசியா நிஷார். இவர் அங்குள்ள தனியார் டிவி செய்தி சேனலில் தொகுப்பாளராக பணியற்றி பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார். ஷாசியா நிஷாரும், மற்றொரு முன்னாள் பத்திரிகையாளரான ஆதர்ஷ் ஷா என்பவரும் சேர்ந்து ஷாசியா பணியாற்றிய தனியார் டிவி செய்தி சேனல் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
பெண் பத்திரிகையாளரான ஷாசியா நிஷார் போலி பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுப்போம் என்று கூறி மிரட்டி ரூ.5 கோடி கொடுக்கும்படி கேட்டனர். அதன் பிறகு அந்த தொகையை ரூ.65 கோடியாக அதிகரித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தனியார் டிவி சேனல் அதிகாரிகள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். ஷாசியா நிஷார் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளையும் அவர்கள் போலீஸில் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அதோடு ஷாசியாவின் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ரூ.34.50 லட்சம் பணம் இருந்தது. அதனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இரண்டு பேரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் வேறு எத்தனை பேரை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஷாசியா நிஷார் `பாரத் 24' என்ற டிவி சேனலில் வேலை செய்து வந்ததாகவும், அவர் வேலையில் சேர்ந்ததில் இருந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு எதிராக போலி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்போவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட டிவி நிர்வாக இயக்குநர் உள்பட 3 பேர் போலீஸில் தனித்தனியாக புகார் கொடுத்துள்ளனர்.