திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: `அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!' - பியூஷ் மனுஷ்...
கேரள பாஜக தலைவராகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா்!
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக நியமிக்கப்படவுள்ளாா்.
தற்போதைய பாஜக மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன் தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்கிறாா். இதையடுத்து, புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் ஞாயிற்றுக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா்.
பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன், மத்திய இணையமைச்சா்கள் சுரேஷ் கோபி, ஜாா்ஜ் குரியன், மூத்த நிா்வாகிகள் கும்மனம் ராஜசேகரன், வி.முரளீதரன், பி.கே.கிருஷ்ணதாஸ், எம்.டி.ரமேஷ் உள்ளிட்டோா்இந்நிகழ்வில் கலந்து கொண்டனா்.
இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 24) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ராஜீவ் சந்திரசேகரின் நியமனத்தைக் கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளரான மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி அதிகாரபூா்வமாக அறிவிப்பாா் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வாகியுள்ள ராஜீவ் சந்திரசேகா், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளுக்கான இணை அமைச்சராக மத்திய பாஜக கூட்டணி அரசில் பொறுப்பு வகித்துள்ளாா்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா், கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, காங்கிரஸ் தலைவா் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.