திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: `அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!' - பியூஷ் மனுஷ் சொல்வதென்ன?
மதுரை மாவட்டத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் மலையானது முருகன் கோயில், காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா, சமண சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட மதநல்லிணக்கத்துக்கு சான்றான தளமாக விளங்குகிறது.
இத்தகைய சூழலில், கடந்த டிசம்பரில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகத் தர்காவுக்கு ஆடு, கோழியைப் பலியிடச் சென்ற இஸ்லாமியரை போலீஸ் தடுத்து நிறுத்தினர்.
அதைத் தொடர்ந்து, ஜனவரியில் திருப்பரங்குன்றத்துக்குச் சென்ற எம்.பி நவாஸ்கனி மலைப் படிக்கட்டுகளில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாகச் சர்ச்சை கிளப்பப்பட்டது.

இறுதியில், இந்துக்கள் வழிபடும் முருகர் மலையில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிட்டு அதன் புனிதத் தன்மையைக் களங்கப்படுவதாகவும், இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும் பிரச்னை கிளம்பியது.
பா.ஜ.க-வினரும், இந்துத்துவ அமைப்புகளும் மலையை மீட்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். அது சற்று ஓய்ந்து, மறுபக்கம் தொல்லியல் துறை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு தரப்பினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புவதாக மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கெதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அளித்த புகாரில், அண்ணாமலை மீது BNS 192, 196 (1), 352, 353 (1) (b), 353 (1) (c), 353 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பியூஷ் மனுஷ், ``திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் 1931 லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறிப்பிட்டு முழு மலையும் முருகனுக்குச் சொந்தமானது என்று பொய் பரப்புகிறார்கள்.

ஆனால், அந்தத் தீர்ப்பில் தர்கா, தர்காவுக்குச் செல்லும் பாதை, நெல்லித்தோப்பு ஆகியவை முஸ்லிம்களுக்கானது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஒரு தரப்பினரைத் தூண்டிவிடுவதற்காக இருவரும் பொய்யைக் கூறிவந்தனர்.
இதைத்தான், பிப்ரவரி 19-ம் தேதி கமிஷனர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் புகாராக அனுப்பினேன். மார்ச் 19-ம் தேதி போலீஸார் என்னை அழைத்து விசாரித்து எழுத்துபூர்வமாக புகார் பெற்றுக்கொண்டு அண்ணாமலை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
அடுத்தகட்டமாக போலீஸ் தரப்பிலிருந்து அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைதுசெய்வார்கள்" என்று தெரிவித்தார்.