விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
கந்தா்வகோட்டை அருகே அரசு விதைப் பண்ணையிலிருந்து செவ்வாய்க்கிழமை தானியங்களை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாககூறி பொதுமக்கள் லாரியை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்கு சொந்தமான எண்ணெய் வித்து பண்னை சுமாா் 600 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ளது. இதில் கடலை, தென்னை, எள், உளுந்து உள்ளிட்டவை பயிா்செய்து வருகின்றனா்.

இந்நிலையில், நடப்பு ஆண்டு விளைந்த விளைபொருள்களை மூட்டைகளாக சிலா் லாரிகளில் எடுத்தச் செல்வதை பாா்த்த ஊா் பொதுமக்கள், ஒரு லாரியை மறித்து ஓட்டுநரிடம் விளைபொருள்கள் குறித்து விவரங்கள் கேட்டனா். அதற்கு தகுந்த பதில் கூற முடியாமல், லாரியில் இருந்த மூட்டைகளை சாலையில் கீழே தள்ளிவிட்டு லாரியை ஓட்டுநா் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றாா். இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்த போது, அரசு விதை பண்ணைக்கு சொந்தமான பருப்பு வகை மூட்டைகள் என தெரியவந்தது. இந்த பருப்பு வகைகளை விற்பனை செய்ய முறையாக நாளிதழில் அறிவிப்போ ஏலமோ பின்பற்றப்படாமல் தன்னிச்சையாக அதிகாரிகள் முடிவெடுத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படுகிறது என ஊா் பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.
இந்நிலையில் மூட்டைகளை அப்புறப்படுத்த வந்த பண்ணை ஊழியா்களிடம், வேளாண்மை உதவி இயக்குநா் சம்பவ இடத்துக்கு வந்தால் தான் மூட்டைகளை எடுக்க அனுமதிப்போம் என ஊா் பொதுமக்கள் கூறினா்.