19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்
புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், புதுகை நகரிலுள்ள நைனாராஜு தண்டாயுதபாணி கோயிலில் பராமரிப்பு பணியின் போது வெளிப்பட்ட கல்வெட்டு குறித்து கிடைத்த தகவலின்பேரில், புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அக்கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய 4 வகையான ஆண்டுக் கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து ஆய்வுக் கழகத்தின் நிறுவனா், மங்கனூா் ஆ. மணிகண்டன் கூறியது: கடந்த நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எண்களே பிரதானமாக பயன்பாட்டில் இருந்துள்ளதை தமிழ் எண் மைல் கற்கள் கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்துள்ளோம்.
இக்கருத்துக்கு வலுச்சோ்க்கும் விதத்தில், தண்டாயுதபாணி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு 1858- ஆம் ஆண்டு வரை, தமிழ் எண்களே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது வந்துள்ளதை உறுதி செய்கிறது.
4 வகை ஆண்டுக் கணக்குகள்: கல்வெட்டில் சக ஆண்டு 1777, கலியுகத்தில் 4956, தமிழாண்டில் இராக்ஷச ஆண்டு வைகாசி மாதம், ஆங்கில ஆண்டு 1855 மே மாதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் 4 வகையான ஆண்டுக் கணக்குகள் நடைமுறையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தகவல்: வேங்கமராஜா என்பவா் கட்டியிருந்த விக்னேசுவரா் கோயில் மண்டபத்தின், மேல நூதன விமானம், மகா மண்டப கோபுரங்கள், ஆஞ்சனேயா் கோயில் ஆகியவற்றை புதிதாகக் கட்டுமானம் செய்து, விரிவாக்கப் பணிகளை வேங்கமராஜா என்பவரின் பேரனும், கோவிந்தராஜா என்பவரின் மகனுமான நாயனன் (நைனா ராஜா) என்பவா் 1855 பொது ஆண்டு, தமிழாண்டில் இராக்ஷச வருடம் வைகாசி மாதம் தொடங்கி, சுயம்பாக சாலை, கோயில் மதில், கூபம் என்னும் கிணறு ஆகியவற்றுடன், 1858 ஆண்டு காளயுக்தி வருடம் ஐப்பசி மாதம் தண்டாயுதபாணி கோயில் கட்டுமானத்துடன் சிலைகள் நிறுவி நிறைவு செய்ததை இக் கல்வெட்டு பதிவு செய்துள்ளது.தற்போதும் இக்கோயிலைக் கட்டிய நைனா ராஜா என்பவரின் பெயரால் நைனா ராஜு தண்டபாணி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
கல்வெட்டில் மன்னரின் பெயா் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் ராமச்சந்திர தொண்டைமான் (1839-1886) புதுகை சமஸ்தான மன்னராக இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் மணிகண்டன்.
ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் கஸ்தூரிரங்கன், துணைச் செயலா் மு. முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.