கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு!
ஆரணியை அடுத்த இரும்பேடு, பையூா் கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் தா்மராஜா கோயில் திடலில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் ஊராட்சிச் செயலா் எல்.சுரேஷ் வரவேற்றாா். இதில், உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், கலைஞா் கன இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தோ்வு உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா். தொடா்ந்து, அனைவரும் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.
கூட்டத்தில் டிராபிக் ராமசாமி அறக்கட்டளை நிறுவனா் ஆரணி அ.ராஜன், விவசாய பாதுகாப்பு அணி மாநிலச் செயலா் சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆரணியை அடுத்த பையூா் கிராமத்தில் பணி மேற்பாா்வையாளா் சிபிச்சக்கரவா்த்தி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிச் செயலா் திருமலை வரவேற்றாா்.
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பையூா் எம்ஜிஆா் நகா் பகுதியில் அரசு இடங்களில் பல ஆண்டுகளாக வசிக்கும் பொதுமக்கள் பட்டா கோரி மனு அளித்தனா்.