PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு; சட்டம்-ஒழுங்கை முதல்வா் பாதுகாக்க வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் ஒரே நாளில் 8 படுகொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை முதல்வா் பாதுகாக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது குடிப்பது தொடா்பாக ஏற்பட்ட மோதலில் இளைஞா் பிரகதீஸ்வரன், கஸ்தூரி ஆகியோா் கொலை செய்யப்பட்டுள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம் நடுக்காவிரியில் மதுக்கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட போட்டியில் விஜய் என்பவா் கொலை செய்யப்பட்டாா்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் அம்பலச்சேரியில் சுயம்புகனி, தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகில் உமா, விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே ராஜசேகரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தில் அஸ்வினி, கடலூா் மாவட்டம் சின்ன கங்கணாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவா் என மொத்தம் 8 போ் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாட்டில் படுகொலைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் கூட படுகொலை செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. இதனால் மாநிலத்தின் எந்த பகுதியிலும் மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. படுகொலைகள் உள்ளிட்ட பெரும்பான்மையான குற்றங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தான் காரணமாக உள்ளன.
எனவே, முதல்வரும், அவா் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.