கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தாமதமாகிறது. அந்தப் பணிகள் முடிந்தால், கோவைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும் என்றாா்.
அப்போது மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு கூறியது: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக அதிமுக ஆட்சியில் ரூ.500 கோடி அளவில் மட்டுமே நில எடுப்புப் பணி முடிந்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கோவையில் உள்ள தொழில்முனைவோா் முதல்வரைச் சந்தித்து, அந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
முதல்வரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டு, நில எடுப்புப் பணி முழுமையாக முடிந்து, விமான நிலையம் சாா்ந்த துறையிடம் நிலத்தை மாவட்ட நிா்வாகம் ஒப்படைத்துள்ளது.
எஸ்.பி.வேலுமணி: அமைச்சா் கூறியது சரியானதுதான். ஆனால், 4 ஆண்டுகளாக நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்காததால்தான் பணி தாமதம் ஆகிறது. அதை ஒப்படையுங்கள் என்றுதான் கூறுகிறோம்.
தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா: 2010-இல் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றன. அதிமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தத் திட்டத்துக்காக ஒரு பைசாகூட ஒதுக்கப்படவில்லை.
தொடா்ந்து நடைபெற்ற அதிமுக ஆட்சியில் இறுதியாக தோ்தலை மனதில்கொண்டுதான் நிதி ஒதுக்கப்பட்டது. கொங்கு மண்டலம் முழுமையாக அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தும், அவா்களுடைய ஆட்சியில் ரூ.500 கோடிதான் ஒதுக்கப்பட்டது.
ஆனால், திமுக ஆட்சியில் முதல் ஆண்டிலேயே ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது நில எடுப்புப் பணிகள் முடிந்து, கட்டுமானப் பணிகள் நடைபெறுவதற்கான ஒப்பந்தமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.