இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | ...
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பயணியிடம் துப்பாக்கி குண்டை மத்திய தொழில் பாதுகாப்புப்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு பயணிப்பதற்காக வந்த பெண் பயணி ஒருவரின் கைப்பையை பாதுகாப்பு அலுவலர்கள் வழக்கம்போல ஸ்கேன் கருவி மூலம் பரிசோதித்தனர்.
அப்போது, பயணி கொண்டு வந்த கைப்பையில் குண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் பரபரப்பு அடைந்த பாதுகாப்பு அலுவலர்கள், அந்த பெண் பயணியை தனியே நிறுத்தி வைத்து, தகுந்த பாதுகாப்புடன் திறந்து பார்த்தபோது, அதில் 9 எம்.எம். ரக துப்பாக்கி குண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த குண்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரிடம் விசாரணை நடத்தினா்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த பெண் பயணியையும், துப்பாக்கி குண்டையும் பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர் .
பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்த பயணியிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்த பிரபல அறக்கட்டளை ஒன்றின் அறங்காவலரின் மனைவி என்பதும், பெங்களூருக்கு கிளம்பியபோது துப்பாக்கி தோட்டா இருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. அவரிடம் பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.