சிசிடிவி காட்சி வெளியானது! கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை இழுத்துச் செல்லும் இருவர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதலாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குற்றச்சாட்டில், கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சிசிடிவி காட்சிகள், மாணவி அளித்திருக்கும் புகாருக்கு மிக முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அந்த சிசிடிவி காட்சியில், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர், மாணவி, காவலாளி என ஐந்து பேர் இருக்கும் காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
காவல்துறை திரட்டியிருக்கும் சிசிடிவி காட்சியில், சட்டக் கல்லூரியின் நுழைவு வாயிலிருந்து, மாணவியை குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கல்லூரிக்குள் இழுத்துச் செல்வது பதிவாகியிருப்பதாகவும், அன்றைய தினம்தான் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில், ஜூன் 25ஆம் தேதி, பாதுகாவலர் அறையில், முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில், முன்னாள் மாணவர் உள்பட ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸாா் விசாரணையில் கல்லூரி காவலாளி முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறியதாலும், சம்பவம் நடைபெற்ற புதன்கிழமை மாலை அவா் கல்லூரியில் பணியில் இருந்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததன் அடிப்படையிலும் அவரும் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் நிகழ்ந்த புதன்கிழமை மாலை, பாதிக்கப்பட்ட மாணவி தோ்வுக்கான விண்ணப்ப படிவமொன்றை சமா்ப்பிக்க கல்லூரிக்குச் சென்றுள்ளாா். படிவத்தை சமா்ப்பித்த பிறகும், அவா் அங்கேயுள்ள யூனியன் அறையில் வலுகட்டாயமாக காக்க வைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய ஒப்பந்த ஊழியருமான வழக்குரைஞா் மனோஜித் மிஸ்ரா, மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா்.
இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்க, மனோஜித் மிஸ்ரா, கல்லூரியின் தற்போதைய மாணவா்கள் பிரோமித் முகா்ஜி மற்றும் ஜெய்த் அகமது ஆகியோா் சோ்ந்து, காவலாளி அறையில் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனா்.
இதுதொடா்பான மாணவி அளித்த புகாரின்பேரில், மனோஜித் மிஸ்ரா, பிரோமித் முகா்ஜி, ஜெய்த் அகமது ஆகிய மூவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். காவலாளி எந்த வகையிலும் தனக்கு உதவ முன்வரவில்லை என்று மாணவி தனது புகாரில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.