சின்னதிரையில் இயக்குநர், நடிகர் பாண்டியராஜன்!
இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் சின்னதிரை தொடரில் நடித்துவருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் பாண்டியராஜன் நடிக்கிறார்.
நகைச்சுவை உணர்வுடன் கூடிய இயல்பான நடிப்பின்மூலம் மக்களைக் கவர்ந்த பாண்டியராஜன், வீரா தொடரில் அதே பாணியில் நடிப்பதால், தொடருக்கான பார்வையாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீதிபதியாக நடிக்கும் பாண்டியராஜன் பாத்திரத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், கதைக்களமும் அவருக்கேற்ப விரிவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடரில் அர்ஜுன், வைஷ்ணு ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன், சிவகுமார், லட்சுமி, சுபிக்ஷா, பாலாஜி, சித்தார்த் உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் இத்தொடரில் நீதிபதியாக நடிக்கிறார். நகைச்சுவை உணர்வு கலந்த இயல்பான நடிப்புக்குக் கூடிய ரசிகர் பட்டாளம், இத்தொடரிலும் அவருக்குத் தொடர்கிறது.
தமிழ் சினிமாவில் 1985ஆம் ஆண்டு வெளியான ஆண் பாவம் படத்தை இயக்கி நடித்ததன் மூலம் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் பாண்டியராஜன்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான நகைச்சுவை கலந்த குடும்பப் படங்களை இயக்கி நடித்துள்ளார். 1985-ல் வெளியான கன்னி ராசி, 1996-ல் வெளியான கோபாலா கோபாலா, 2000ம் ஆண்டு வெளியான டபுள்ஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
தமிழ் சினிமாவில் நாயகன், சிறப்புத் தோற்றம், குணச்சித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் 80க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள பாண்டியராஜன், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது வீரா தொடரில் பாண்டியராஜன் நடிப்பது அத்தொடருக்கான டிஆர்பி புள்ளிகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முத்துக்குமரன்!