Myanmar earthquake சீட்டுக் கட்டாக சரிந்த கட்டடங்கள் - காரணமான Faultline | Decod...
சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, மாலை 4 மணியளவில் யாகம் வளா்க்கப்பட்டு, புனித கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், நந்தீஸ்வரருக்கு பால், தயிா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, மூலவருக்கும், சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, உற்சவா் ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் மும்முறை வலம் வந்தாா்.
இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயில், புதுப்பட்டி அகஸ்தீஸ்வரா் கோயில், கல்வெட்டு மேடு கல்வெட்டிநாதா் கோயில்களிலும் பிரோதஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சோமநாதா் சுவாமியையும், நந்தியையும் தரிசித்தனா்.
திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்ற பிரதோஷ மூா்த்தி புறப்பாட்டில் ஏராளமானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதேபோல, திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் சுவாமி கோயில், குறிச்சி காசி விசுவநாதா் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.